அந்தாதி வெண்பா – 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
இந்த வார வெண்பா – 16
பலனது பெற்றால் அதுமட்டும் போதும்
நலமாய்தாம் வாழயோகம் என்றே – உலகில்
வருந்துவோர் தம்கவலை தீர்க்காத பேரால்
மருந்துக்கும் இல்லை பயன்
பொருள்:
யோக சாதனையினால் கிடைக்கும் பலன் பற்றித் தெரிந்து கொள்ளும் யாருக்கும், அந்தப் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அது இயற்கைதான். ஆனால் அந்தப் பலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு யோகத்தைப் பயின்று தன்னலமாக தான் மட்டுமே நலமாய் இருந்தால் போதும் என்று நினைப்பவர்களாலும் அவர்கள் பெற்ற யோக சாதனையினாலும் கெடுதலே உண்டாகும்.
மாறாக யோக சாதனையினால் தான் பெற்ற பலனைக் கொண்டு இந்த உலகில் துன்பத்தாலும் நோயாலும் அவதிப்படும் மக்களுக்கு அதைப் போக்கும் வழிகாட்டி அவர்கள் விமோசனம் பெற உதவி புரிவதே ஒருவர் தான் கற்ற யோக சாதனையின் மூலம் செய்யக்கூடிய உயர்ந்த சேவையாகும்.
தன்னலம் கருதாது பிறருக்கு உதவும் எண்ணமுடையவர்களே யோக சாதனை பெற முயல வேண்டும். அப்படி இல்லாது சுயநலம் உள்ளவர்கள் பெறும் பலன் யாருக்கும் உதவாது.