இன்றைய நம் தினசரி வாழ்க்கையில் செல்போன் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். அதன் உபயோகத்தால் நன்மை அதிகமா அல்லது தொந்திரவு அதிகமா என்பது பேராசிரியர் சாலமன் பாப்பையாவை வைத்து பட்டி மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் ஒருவருக்கு அவருடைய வியாபார நடைமுறைக்கு செல்போனின் உபயோகம் மிகவும் அவசியம் என்பதில் வேறு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஒரு சிலர் அதைப் பொழுது போக்காகவும், வீண் அரட்டை அடிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை, அதிலும் கேம் விளையாடுகிறேன் பேர்வழி என்று இரவு வெகு நேரம் அதிலேயே மூழ்கி தூக்கத்தைத் தொலைப்பவர்களும் உண்டு. அது அவர்களை அடிமையாக்கி அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்குகிறது.
அது மட்டுமில்லாமல் எந்த நேரத்தில் என்று இல்லாமல் எப்போதும் போன் பேசிக் கொண்டே சென்று, கவனக்குறைவின் காரணமாக இரயிலிலோ, பஸ்ஸிலோ அடிபட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் செல்போன் என்பது கவனத்தை திசை திருப்பி நமது பெரும்பாலான நேரத்தை வீணடிக்கிறது என்பது உண்மை.
செல்போனைப் பற்றி ஒரு கலந்துரையாடலில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால் முற்காலத்தில் இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பதற்காக கொலம்பஸ் ஒரு கப்பலில் புறப்பட்டு கடலில் வழி தவறி பல இன்னல்களை அனுபவித்து முடிவில் கரை ஒதுங்கி அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் அல்லவா?
அப்படி கப்பலில் புறப்பட்ட நேரத்தில் கொலம்பஸிடம் ஒரு செல்போன் இருந்திருந்தால் அவர் அமெரிக்காவைக் கண்டு பிடித்திருப்பாரா? என்று கேட்டார். அதோடு ‘மாமா நீங்க எங்க இருக்கீங்க?’ என்று காலர் ட்யூன் வேறு வைத்திருந்தார் என்றால், அவர் அவ்வளவு அவஸ்தைப் பட்ட பிறகு பயணத்தை தொடர்ந்திருப்பாரா? என்று கேட்டார். இந்தக் கேள்வி நமக்கு கொஞ்சம் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தாலும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. நகைச்சுவையான அந்த உரையாடல் துணுக்கை ஒலி வடிவில் கேட்க கீழே உள்ள பிளேயரில் சிவப்பு பட்டனை அழுத்தவும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. அதாவது நமது கடினமான முயற்சியை, மனத்தின் வலிமையைக் குலைப்பதில் இந்த செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. மனத்தை ஒருமுகப் படுத்தி ஏதாவது தீவிரமான முயற்சியில் இருக்கும் போது, செல்போன் ஒலித்தால் அது நமது முயற்சியின் வீரியத்தைக் குறைக்கிறது என்று சொல்லலாம்.
இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், நாம் தீவிரமான கவனத்துடன் வேலை செய்ய வேண்டிய நேரங்களில் அதனை சைலண்ட் மோடில் போட்டு வைப்பது உத்தமம். விஞ்ஞான வளர்ச்சியை நாம் நம்முடைய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த நினைக்கும் அதே சமயத்தில் அது நம்முடைய வளர்ச்சியையோ அல்லது நிம்மதியையோ பாதிக்காமல் இருக்க வேண்டும். சரிதானே!