சென்னையில் புத்தகக் காட்சி ஆரம்பமாகப் போகிறது என்று 2014 ஜனவரி முதல் வாரத்தில் கேள்விப் பட்டவுடனேயே ஆவலுடன் அதற்காக காத்திருக்க ஆரம்பித்தேன். படிக்கும் பழக்கம் உள்ள எல்லோருக்கும் உண்டாகும் ஆவல்தான் அது. ஆனால் இப்போது யாவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பது திரு. சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தி விவாதிக்க வேண்டிய விஷயமாகி விட்டது. இது போன்ற புத்தகக் காட்சிகள் படிக்கும் பழக்கத்தை உற்சாகப் படுத்தும் என்பது நமது உறுதியான நம்பிக்கை.
என்னுடைய எண்ணம் பின்னோக்கிச் செல்கிறது. எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயமாக என்னுடைய தந்தைதான் காரணம். சிறு வயது முதல் நான் வளர்ந்த சூழ்நிலையில், வீட்டில் இறைந்து கிடந்த வார இதழ்களும், கதைப் புத்தகங்களும்தான் காரணம்.
நூல்நிலையம்கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் நான் பிறந்தாலும் புத்தகங்களை வாசிப்பதில் என் தந்தைக்கு இருந்த ஆர்வம் காரணமாக பக்கத்து கிராமத்து நூல்நிலையத்தில் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் ஒரு பிஸியான வியாபாரியாக இருந்தாலும், புத்தகம் படிப்பதில் அவர் காட்டிய ஆர்வம் இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
என்னைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால் எனக்கும் புத்தகங்களுக்கும் இடையேயான நட்பு இருந்ததை, பின்பு பள்ளியில் படிக்கும் நாட்களில் தெரிந்து கொண்டேன். தவழ்கின்ற வயதில் வீட்டில் உள்ள பல புத்தகங்களிலும் பேனாவை வைத்து நான் கிறுக்கி வைத்து இருந்ததைப் பார்த்தபோது தெரிந்தது .
பள்ளியில் படிக்கும் போது என்னுடைய புத்தக வேட்கைக்கு தடை செய்யாமல் நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்து படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார் என்னுடைய தந்தை. அதுமுதல் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கம் எனக்கு தீவிரமாகி விட்டது. அதிகாலையே விழித்து விடுவேன் புத்தகம் படிப்பதற்காக. அடிக்கடி நூலகத்திற்கு செல்லும் வழக்கமும் ஏற்பட்டது.
ஆனால் நாளைடைவில் அந்த நூலகர் என்னைக் கண்டாலே ஒருவிதமான தர்ம சங்கடத்தில் நெளிய ஆரம்பித்து விட்டார். காரணம், தினமும் ஒரு புத்தகமாகப் படித்து விட்டு, மறுபடி வந்து புத்தகத்தைத் தேடுகிறேன் பேர்வழி என்று எல்லா புத்தக அலமாரிகளையும் துவம்சம் செய்வதுதான். ஏதாவது ஒரு புத்தகத்தைக் கொடுத்து முதலில் என்னை அங்கிருந்து அனுப்பி வைக்க பெரும்பாடு படுவார்.
நாளாக ஆக எனக்கும் அது தர்ம சங்கடமாக ஆகி விட்டது. அதனால் பெரிய பெரிய சைசில் புத்தகங்களை எடுத்து சென்று படிக்க ஆரம்பித்தேன். குறைந்த பட்சம் ஒரு நான்கைந்து நாட்களுக்காவது நூலகரைப் பார்க்க வேண்டியதில்லை அல்லவா?
அப்படி எடுத்து வந்த புத்தகங்களில் ஒன்றுதான் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் என்ற நாவல். அதன் மையக் கருத்து என்பது அந்த வயதில் புரிந்து கொள்ள இயலாத விஷயம் என்றாலும், அவருடைய எழுத்துக்களின் வலிமை என்னை ஈர்த்தது உண்மை. பின்னாளில் அது திரைப்படமாக உருப்பெற்றபோது அந்தக் கதையை நிஜ வாழ்க்கையில் காணுவது போல ரசிக்க முடிந்தது.
பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் பலவும் அப்பொழுது படித்ததுதான். ஒருசில மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் படித்திருக்கிறேன். சிறு வயதில் காமிக்ஸ் புத்தகங்களில் ஆரம்பித்து, தமிழ்வாணன் புத்தகங்களுக்கு மாறி, பிறகு ஜெயகாந்தன், சாண்டில்யன், கல்கி, சுஜாதா, பாலகுமாரன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, ரமணி சந்திரன் என்று எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புக்களை ரசித்திருக்கிறேன்.
அப்போது படித்ததுதான் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய ரோமாபுரிப் பாண்டியன் என்ற சரித்திர நாவல். கதைக்கேற்ற படங்களுடன் வார இதழில் தொடராக வந்த அந்தக் கதை அழகாக பைண்டு பண்ணப்பட்ட புத்தகமாக எங்கள் வீட்டில் இருந்தது. அந்தப் புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை என் தந்தை கேட்டார் ‘இது எல்லாமே அரசியலாச்சே, உனக்கு என்ன புரியுதுன்னு இதைப் படிச்சுக்கிட்டு இருக்கே’ என்று. நான் எதுவும் பதில் சொல்லவில்லை.
ஆனால் அந்த எழுத்துக்களின் ஆளுமை என்னை படிக்கத் தூண்டியது. அந்த கதையை இரண்டு மூன்று முறை, இல்லை அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியில் நூலகர் அந்தப் புத்தகத்தை நூலகத்துக்கு இலவசமாக வழங்குமாறு கேட்டபோது, என் தந்தையின் அனுமதி கேட்டு அதை நூலகத்துக்கு கொடுத்து விட்டேன். அதுவரை அதை எத்தனை முறை படித்திருப்பேன் என்று ஞாபகம் இல்லை. ஏன், நூலகத்துக்கு கொடுத்த பிறகு கூட ஒருமுறை அதை எடுத்து வந்து வாசித்திருக்கிறேன்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். என் மனதில் பதிந்து விட்ட அந்த ரோமாபுரிப் பாண்டியன், கலைஞர் டி.வியில் தொடராக வரப் போவதாக வந்த விளம்பரம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் என் கண்ணில் பட்டு மறைந்து விட்டது. உடனே ஒரு ஆவல் ஏற்பட்டு கூகுளில் தேடினேன். அப்போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், தன்னுடைய தளத்தில், ‘தமிழ் நாவல்கள் விமரிசகனின் சிபாரிசு’ என்ற தலைப்பில் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று தரவரிசையில் இரண்டு பகுதிகளாக வரிசைப்படுத்தி இருந்தார். அதில் இரண்டாவது பட்டியலில் வரலாற்றுமிகு கற்பனைப் படைப்புகள் என்று வரிசைப் படுத்திய பகுதியில் ரோமாபுரிப் பாண்டியன் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தேன்.
அந்த இடுகையில் முதல் பத்து என்று வரிசைப் படுத்தியதில், சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளிய மரத்தின் கதை நான்காவதாக இடம் பெற்றிருந்தது. நான் ஏற்கெனவே அந்தப் புத்தகம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் என்ற வரிசையில் பார்த்தவுடன் உடனே அதை வாங்க வேண்டும், படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது.
சுந்தர ராமசாமி எழுதிய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு ஏன் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்ற யோசனை எழுந்தது. பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் என்ன என்று தேடியபோது, அவர் மொழி பெயர்த்த செம்மீன் நாவல் குறிப்பிடப் பட்டிருந்தது. நான் சிறு வயதில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. ஆக நானும் அவருடைய புத்தகத்தை வாசித்திருக்கிறேன் என்று கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டது.
அதனால் இப்போது ‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் சென்னை புத்தகக் காட்சிக்கு நான் சென்றபோது, ஒவ்வொரு ஸ்டாலாக தேடி கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தில் அது கிடைக்கும் என்று கேள்விப்பட்டு அங்கு அந்தப் புத்தகத்தை வாங்கியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது.