ஒரு ஆண் முதன் முதலாக ஒரு பெண்ணை பார்க்கும்போது அவளுடைய அழகைத்தான் முதலில் ரசிக்கிறான். அவளுடன் பேசிப்பழக வாய்ப்புக் கிடைக்காதா என்று தவிக்கிறான். அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவள் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டுகிறான். அவளுடன் பேசி விட்டால் உலகமே தன் காலடியில் வந்து விட்டதுபோல நினைக்கிறான். ஆனால் அந்த ஈர்ப்பு தற்காலிகமானது தான்.
அவளிடம் ஏதோ ஒருவகையில் தனக்குத் திருப்தி ஏற்பட்டு விட்டால் அவளின் மீது உள்ள ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது. அந்த ஈர்ப்பு குறையாமல் வைத்திருக்க முடிந்தால் அந்தப்பெண் பேரழகியாக கருதப்படுகிறாள். அதற்கு கிளியோபாட்ரா சிறந்த உதாராணம்.
ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை முதலில் பார்க்கும் போது அவள் நிலைப்பாடே வேறு. அவன் அழகாய் இருப்பதை விடத் தனக்குப் பாதுகாப்பாக இருப்பானா, தன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்வானா, தான் எது சொன்னாலும் செய்து முடிப்பானா, தன்னைக் கஷ்டப்படுத்தாமல் நடத்துவானா தன்னை ஒரு மகாராணியாக ஆக்குவானா அல்லது அதுபோல் நடத்தவாவது செய்வானா என்று பலவிதமாக ஆராய்கிறாள். அவனைப் பலவிதமாகச் சோதிக்கிறாள். அவன் சரியானவன் என்று தோன்றினால் அவனை எத்தனை முடியுமோ அந்தளவுக்கு உயர்த்துகிறாள், தன்னை மோசம் செய்கிறான் என்று உணர்ந்தாள் அவன் எழ முடியாத அளவுக்கு வீழ்த்துகிறாள்.
மாவீரன் ஜூலியஸ் சீசர் எகிப்தின் பேரழகி கிளியோபாட்ராவிடம் மயங்கியதற்கும், ஆனால் அவள் ஜூலியஸ் சீசரைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியில் அமர்ந்ததற்கும் இந்த மாறுபட்ட குணங்களே காரணம். ஜூலியஸ் சீசர் மறைந்த பின் மார்க் ஆண்டனியை தன் வலையில் கிளியோபாட்ரா சிக்க வைத்ததற்கும் அதுவே காரணம்.
ஒரு அழகான பெண் தன்னை கடற்கரையில் வந்து சந்திக்கவும் என்று அழைத்தால் ஒரு இளைஞனுக்கு மகிழ்ச்சியாக இருக்கத்தானே செய்யும். ஆனால் அங்கு அவன் சந்திக்கும் பெண் வேறாக, குடிப்பழக்கம் உள்ளவளாக இருக்கிறாள். அவளைத் திருத்தி நல்ல பெண்ணாக மாற்றும் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் அப்பாவே அந்த வாய்ப்பைத் தருகிறார். ஆனால் அவர் எதிபாராத விஷயம் அங்கு நடக்கிறது.
கடற்கரையில் ஒரு அழகான பெண்ணும் இளைஞனும் அடிக்கடி சந்தித்தால் காதல் வருவது இயற்கைதானே. அந்தக் காதலுக்கு அவளது அப்பாவிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
இது ஒரு மெல்லிய காதல் கதை. அப்பாவின் பெண் என்ற தலைப்பு கொஞ்சம் வித்தியாசமானது. அப்பாவிப் பெண் என்பதும் அதில் மறைந்திருக்கிறது. அப்பாவின் பெண்ணாக இருக்கும் ஒரு பெண்ணை அப்பாவிப் பெண் என்று நினைத்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படை. பெண் என்பவள் சக்தியின் வடிவம் அல்லவா?.
முன்பு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தது. ஆண்களுக்கு முன்னால் வரக்கூடாது. கல்வி அறிவு பெறக்கூடாது என்றெல்லாம் நடைமுறை இருந்தது. மகாகவி பாரதியும் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாடினான்.
ஆனால் இன்றுள்ள பெண்கள் நிறையவே மாறியிருக்கிறார்கள். ஆண்களுக்கு சமமாக நடைபோடுகிறார்கள். கல்வியிலும், அரசியலிலும், தொழில் வளர்ச்சியிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் ஆணுக்கு நிகராக பங்காற்றுகிறார்கள்.
என்றாலும் இன்னும் நம் நாட்டில் ஒரு பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும் புத்திசாலியாய் இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையைத்தானே சுதந்திரமாகத் தீர்மானிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம்.
பெற்றோர்களின் நிர்ப்பந்தம் மற்றும் அவர்கள் மீதுள்ள பாசம், சொந்தக்காலில் நிற்க முடியாமல் இருக்கும் பொருளாதார நிலைமை ஆகியவற்றால் தனது விருப்பத்தையும் ஆசைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்பின் தெரியாத யாரோ ஒருவனுக்கு வாழ்க்கைப் படுகிறாள்.
அப்படி ஒரு சூழ்நிலை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஒரு பெண் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள். பிறகு எப்படித் தன் வாழ்க்கையைத் தானே நிர்மாணிக்கிறாள் என்பதுதான் இந்தக் கதை சொல்லும் செய்தி. அப்பாவின் பெண்ணாக இருப்பதில் தவறில்லை ஆனால் அப்பாவிப் பெண்ணாக இருக்கக்கூடாது என்பதைத்தான் இந்தக் கதையின் நாயகி வந்தனாவின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.
பெண்ணின் சக்தி மகத்தானது. அதை ஆராதிக்கத் தவறினால் பாதிப்பு அந்தப் பெண்ணுக்கல்ல என்று வாழ்ந்து காட்டுகிறது வந்தனாவின் பாத்திரப்படைப்பு. எல்லாம் விதி, தன் தலையெழுத்துப்படி நடக்கட்டும் என்று முடங்கி விடாமல் தன்னுடைய ஆளுமையால் தன் சுதந்திரத்தைத் தானே கட்டமைத்துக் கொள்ளும் ஒரு கதாபாத்திரம் வந்தனா.
இந்த நாவல் இப்போது அமேசானில் கிடைக்கிறது.
இங்கே சொடுக்கி வந்தனாவைச் சந்தியுங்கள்.