இன்று காலையில் கம்ப்யூட்டரை ஆன் செய்து, ஈமெயிலை திறந்து பார்த்தபோது முதலாவதாக இந்த செய்தி வந்திருந்தது.
Another wonderful year is going to end. Remember all the good memories you have made. One more year is on the way to decorate your life with unlimited colours of joy. May the NEW YEAR bring you peace, prosperity, and good health.
Happy New Year 2020.
ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜிங் டைரக்டராக இருந்து ரிட்டையர் ஆன ஒரு பெரிய மனிதர் இதை அனுப்பி இருந்தார். அவருடைய வாழ்த்துக்கும் ஆசிக்கும் என்னுடைய பணிவான நன்றி.
இது இந்த வருடத்தின் கடைசி நாள். அவருடைய செய்தியில் இருப்பது போல் இந்த வருடம் நடந்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இந்த வருடத்தில் சில புத்தகங்களை வாசித்தேன். அவற்றுள் குறிப்பிடத்தக்கது தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய அம்மா வந்தாள். ஜெயமோகன் எழுதிய இரவு, யானை டாக்டர், வணங்கான், அறம் சிறுகதைகள், சோற்றுக்கணக்கு, ரயிலில் போன்ற சில சிறுகதைகள், அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய அசங்கா சிறுகதை, Claire Douglas எழுதிய The TEXT Short story, இன்னும் பல.
இந்த வருடம் ரசிப்பு வலைப்பூவில் வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். இணையப் பத்திரிகைகள் எதற்கும் சிறுகதைகள் எழுதவில்லை. ஏற்கனவே எழுதி இருக்கும் சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக போடலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. அது விஷயமாக ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இளங்கோவன் என்று ஒருவரைப் பற்றி சொன்னார்.
இளங்கோவன் நிறைய பதிப்பகங்களோடு தொடர்பு உள்ளவர் என்று அவர் சொன்னதால், அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் குள்ளநரிக்கூட்டம் என்ற திரைப்படத்தில் அப்பாவாக நடித்தவர். நிறைய கவிதைகள் எழுதுவேன் என்று சொன்னார். சிலவற்றை வாசித்தும் காண்பித்தார்.
அவரிடம் நான் எழுதிய சிறுகதைகள் பற்றியும், பாரதியாரின் முடிவுறாத கதைக்கு எழுதிய ‘சந்திரிகையின் கதை தொடர்ச்சி’ பற்றியும் சொல்லி அவற்றை புத்தகங்களாக போடலாம் என்று நினைப்பதாகச் சொன்னேன். ஆனால் அவர் என்னுடைய நோக்கத்தை புரிந்து கொண்டதாகவோ, ஆர்வம் காட்டியதாகவோ எனக்கு தெரியவில்லை. இன்னொரு நாள் பேசலாம் என்றார்.
அதனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், அமேசான் நடத்தும் கிண்டில் போட்டி பற்றி பேஸ்புக்கில் எழுத்தாளர் சி. சரவணகார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஒரு போஸ்ட் படித்தேன். அவருக்கு என்னுடைய நன்றி. அதற்கு முன்னால் அமேசான் பிரைம் மெம்பராக நான் இருந்தபோது கிண்டில் புத்தகங்களை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
அதனால் இப்பொழுது கிண்டிலில் எப்படி புத்தகங்கள் வெளியிடுவது என்பதைப்பற்றி அதிகமாக படித்து தெரிந்து கொண்டேன். அது பற்றி தெரிந்தவர்கள் யாரும் எனக்கு பழக்கம் இல்லாததால். நானே முயற்சி செய்து அது வெளியிடும் முறையை புரிந்து கொண்டேன். இன்னொரு வேடிக்கை வேறு ஒருவருக்கும் அவருடைய புத்தகம் கிண்டிலில் வெளியாக உதவி இருக்கிறேன்.
செப்டம்பர் மாதத்தில் முதன் முதலாக Inspire Yourself with real life stories என்ற பெயரில் ஒரு ஆங்கில புத்தகம் கிண்டிலில் வெளியிட்டேன்.
புத்தகம் வெளியிடும் போது வரும் பிரச்சனைகள் என்ன, அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி எல்லாம் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதே மாதத்தில் தொடர்ச்சியாக தமிழில் 5 புத்தகங்களை வெளியிட்டு வெளியிட்டேன்
வெற்றியின் ரகசியம், வாழ்க்கைத்தரம் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்பு புத்தகங்கள், சந்திரிகையின் கதை 2.0 ஒன்று, சும்மா ஊதுங்க பாஸ் என்ற நகைச்சுவை குறுநாவல் ஒன்று, பிறகு அமேசான் கிண்டில் நடத்தும் PENTOPUBLISH2019 போட்டிக்காக எழுதிய கிளினிக்கில் ஒருநாள் என்ற நகைச்சுவை நாடகம் புத்தகமும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டேன்.
மேலும் அந்தப் போட்டிக்கு ஒரு நாவலை எழுதும் முயற்சியில் இறங்கி, ஒரு மாதகாலத்தில் அப்பாவின் பெண் என்ற நாவலையும் எழுதி முடித்து அதையும் கிண்டிலில் வெளியிட்டேன். நான் எழுதிய முதல் நாவல் அது.
அதன் பிறகு கவிதைத் தொகுப்பாக, படங்களுக்கு ஏற்ற கவிதைகள் என்று அப்பாவின் அருமை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டேன். இப்போது அமேசான் கிண்டில் ஸ்டோரில் மொத்தமாக எட்டு புத்தகங்கள் இருக்கின்றன.
சென்ற வருடம் என்னுடைய புத்தகங்கள் கிண்டிலில் வெளிவந்ததை என்னுடைய எழுத்து முயற்சியில் ஒரு படிக்கல்லாகவே நான் நினைக்கிறேன். இப்போது ஆங்கிலத்தில் ஒரு நாவலும், தமிழில் மூன்று புத்தகங்களும், பாதி எழுதிய நிலையில் இருக்கின்றன. 2020ம் வருடம் அந்தப் புத்தகங்கள் வெளியாகலாம்.
வரும் 2020ம் வருடம் தங்கள் அனைவருக்கும் தங்ககளுடைய கனவுகளை அடைய, குறிக்கோள்களை நிறைவேற்ற ஏற்ற வகையில் அனைத்தும் கிடைக்கும் சிறந்த வருடமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த வருடம் எல்லா வகையிலும் தங்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் வளத்தையும் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன்