அமேசான் அறிவித்த pentopublish2019 என்ற பெயரில் நடத்தும் போட்டிக்கு புத்தகங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு 14-12-2019 அன்றுடன் முடிவடைந்து விட்டது. இனி புத்தகங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெறும் என்று நினைக்கிறேன். முடிவுகள் அடுத்த வருடம் 2020ல் வெளியாகும்.
நேற்று ஃபேஸ்புக்கில் ஒருவர் பேசி இருந்ததை பார்த்தேன். மின்புத்தகம் (E-book) வெளியிடுவதைப் பற்றி அவர் இவ்வாறு சொல்லி இருந்தார்.
“ நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டால் அதை யாரும் வாங்க மாட்டார்கள். அப்படியே யாராவது வாங்கினாலும் அதிகபட்சம் ஒரு பத்து புத்தகம் விற்பனையாகும். அதற்கும் யாரும் மதிப்புரை எழுத மாட்டார்கள்.
அதனால்தான் நாங்கள் ஒரு குழுவாக சேர்ந்து எங்களுடைய புத்தகங்களை விற்பனை செய்வதற்கும் அவர்களிடம் மதிப்புரை எழுதி வாங்குவதற்கும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.”
அவர் சொன்ன இந்தக் கருத்து ஒரு வேளை சரியாக இருக்குமோ என்று என்னை யோசிக்க வைத்தது. ஏன் அவர் இப்படி சொல்கிறார்? இது உண்மைதானா? மக்கள் ஏன் புத்தகங்களை வாங்கி படிக்க மாட்டார்கள் என்று சொல்கிறார். அப்படியே படித்தாலும் ஏன் மதிப்புரை செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறார் என்று யோசித்தேன்
எனக்கு சில விஷயங்கள் புலப்பட்டது. ஒருவர் தன்னுடைய கருத்துக்களை வெளியிட தயங்குவதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றியது. அவை என்னவென்று யோசித்தேன்.
- புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்திருக்கலாம்.
இன்றைய டிவி, கம்ப்யூட்டர் கலாச்சாரத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அதற்குத்தான் இன்றைய புத்தகங்கள் E-book வடிவில் கிடைக்கிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், கிண்டில், மொபைல் போன் என்று எதில் வேண்டுமானாலும் படிக்கலாம்.
உண்மையில் புத்தகம் படிக்கும்போது நம்முடைய சிந்தனையில் ஒரு தெளிவு பிறக்கிறது. இதை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
- பயம் காரணமாக இருக்கலாம்
தாங்கள் தமிழ் புத்தகம் படிப்பது பிறருக்குத் தெரிந்து விடுமோ என்ற பயம் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் தமிழில் பேசுவதும் தமிழில் எழுதுவதும் சிலருக்கு கௌரவ குறைச்சலாக இருக்கலாம்.
இன்னொரு பயம் என்னவென்றால், மதிப்புரை எழுதி அது வெளியாகி விட்டால் தங்களுடைய பெயர் வெளியில் தெரிந்து விடும் என்ற பயமும் சிலருக்கு இருக்கலாம்.
மதிப்புரை தருபவர்கள் பெயர் வெண்பாவில் வருமாறு கவிதை எழுதுகிறாரே, அதில் நமது பெயர் வந்து விடுமோ என்ற கூச்சம் காரணமாக இருக்கலாம்.
மேலும் தாங்கள் சொல்லும் கருத்து சிலருக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.
அல்லது ஒரு வேளை புத்தகம் நன்றாக இல்லை என்று நாம் மதிப்புரை செய்தால் அது அந்த எழுத்தாளரை புண்படுத்தி விடுமோ, அவர் கோபப்பட்டு விடுவாரோ என்ற நல்ல எண்ணத்தினால் வரும் பயம் காரணமாக இருக்கலாம்.
அப்படி நன்றாக இல்லை என்று நாம் எழுதி இருந்ததைப் படித்து விட்டு சிலர் அந்த புத்தகத்தை வாங்க மாட்டார்களோ என்ற நல்லெண்ணமும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். எந்தப் புத்தகத்தையும் படித்து சரியான கருத்துக்களை சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் பாராட்டினால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். திருத்தங்கள் சொன்னாலோ அல்லது ஆலோசனைகளை எடுத்துரைத்தாலோ அதை நிச்சயம் கருத்தில் கொள்வேன். எந்த வகையிலும் விமர்சனம் செய்தவர்களை நான் திட்டவோ, புண்படுத்தவோ மாட்டேன்.
என்னதான் சொன்னாலும் பயமாகத்தான் இருக்கிறது என்று சொல்பவர்கள் தயவு செய்து மதிப்புரை எழுத வேண்டாம். உங்கள் தனி மனித சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எதையுமே துணிந்து செய்தால்தான் அது நமக்கு மட்டும் இல்லாமல் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.