Tag Archives: நீயா நானா

சராசரி வாடிக்கையாளரின் வாழ்க்கைத்தரம் – கவிதை!

4 டிசம்பர்

ஏற்கெனவே நாம் கவிஞர் கடிவேலுவிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை இப்போது சொல்லிக்கொண்டு வருகிறோம் அல்லவா? சென்ற இடுகையில் கவிஞர் சொன்ன விஷயங்கள் நம்மை யோசிக்க வைத்தது என்று சொல்லி இருந்தோம். நமது வருமானத்தில் 70% பணத்தை நமக்குத் தேவையான 30% விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்காக யார் யாருக்கோ கொடுக்கிறோம் என்று சொன்னார். எவ்வளவு பெரிய நடைமுறை உண்மை இது. இதை யாராவது மாற்ற முடியுமா? ஏதாவது வழி இருக்கிறதா?

உண்மையில் அது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இன்னும் சொல்லப்போனால் ஒரு வகையில் அது  முடியாத காரியம்தான். ஏனென்றால் இந்த நடைமுறை என்பது பல காலமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயம். அதுவும் காலகாலமாக நடக்கும் விஷயம். அரசாங்கம் கூட இதை மாற்ற முற்படாது. அப்படியே வேறு ஒரு ஏற்பாடு செய்தாலும் அது வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. அதற்கு நமது உழவர் சந்தை ஒரு உதாரணம். அப்படியென்றால் இதற்கு மாற்றாக வேறு என்னதான் வழி? எந்த ஒரு நடைமுறைக்கும் மாற்று வழி என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், விஜய் டிவியில் கோபிநாத்தின் நீயா நானா? நிகழ்ச்சியில் பொருளாதார மேதைகளும், பொதுமக்களும் விலைவாசி ஏற்றமும், அதனால் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கமும் என்பது பற்றி விவாதம் நடத்தினார்கள். நாம்கூட அப்போது அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி ஒரு இடுகை வெளியிட்டிருந்தோம். அதை ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும் விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும்.

அதில் ஒருவர் பேசும்போது, ‘விலைவாசி ஏற்றத்தினால் பொதுமக்கள்தான் பாதிக்கப் படுகிறார்கள். வியாபாரிகள் பாதிக்கப் படுவதில்லை. ஏனென்றால் அந்த விலைவாசி உயர்வினால் ஏற்படும் விலை ஏற்றத்தை அவர்கள் மற்றவர்கள் தலையில் சுமத்தி விடுகிறார்கள்’ என்று சொன்னார். இன்னொருவர் பேசும்போது, ‘ஒரு விவசாயி, உற்பத்தியாகும் பொருளை என்ன விலைக்கு விற்கிறாரோ அதைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமான விலைக்குத்தான் வியாபாரிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அதற்குப் பதிலாக விவசாயியிடமே நேரடியாக கொள்முதல் செய்யும்போது அவருக்கும் நல்ல விலை கிடைக்கிறது. பொதுமக்களுக்கும் கடையில் வாங்குவதை விட குறைவான விலைக்குக் கிடைக்கும்’ என்று சொன்னார். நமது நாட்டிலும் அரசு உழவர் சந்தை என்ற ஒரு நடைமுறையை ஏற்படுத்தியது. ஆனால் அது நினைத்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

அதே கருத்து இப்போது பேசிக்கொண்டிருக்கும் விஷயத்துக்கும் பொருத்தமானதாக இருக்கும். நமக்குத் தேவையான பொருட்களை நாமே தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கும்போது நமக்கு குறைவான விலையில் நல்ல தரமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்து ஒரு பொருளை சந்தைப் படுத்தும் கம்பெனிகளுடன் போட்டி போட்டு ஒரு தயாரிப்பாளர் நேரடி விற்பனை மூலம் பொருட்களை சந்தைப் படுத்துவது எளிதான விஷயமாக இருக்காது. வலிமையான கம்பெனியாக இல்லாவிட்டால் நீண்ட நாட்களுக்கு அந்த முறையில் வியாபாரத்தை நடத்துவது முடியாத காரியமாகிவிடும்.

அப்படியென்றால் இதற்கு என்னதான் வழி?

கவிஞர் நம் சிந்தனையைக் கலைக்காமல் ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தார்.

“அப்படியென்றால் வாடிக்கையாளர்தான் மற்றவர்களை எல்லாம் வாழ வைக்கிறார். ஆனால் அவரோ கடைசிவரைக்கும் கஷ்டப்படும் கஸ்டமராகவே வாழ்க்கையைக் கழிக்கிறார் என்று சொல்கிறீரா?” என்று நாம் கேட்டவுடன் புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தி நம்மைப் பார்த்தார் கவிஞர்.

“ஆமாம், அதுதான் யதார்த்தமான உண்மை. இதோ இந்தக் கவிதையைப் படித்துப் பாரும்” என்று ஒரு காகிதத்தை நம்மிடம் கொடுத்தார். நாம் அதை வாங்கி பிரித்துப் படித்தோம்.

ஒரு வாடிக்கையாளரின் புலம்பல்

அன்றாடம் பொருள் வாங்கும்

அண்ணாச்சி கடை முன்னால்

புத்தம்புது பைக் ஒன்று

சத்தமின்றி வந்து நின்றது

நீண்டநாள் நண்பராய் பழகிய

அண்ணாச்சியிடம் நான் கேட்டேன்

“வண்டி புதுசா?”

என்னுடைய கேள்விக்கு

அண்ணாச்சி பதில் சொன்னார்

“பெட்ரோல் வில்லை ஏறிப்போச்சே

புதுவண்டி மைலேஜ் கொடுக்கும்”

நானறிந்து இதுவரைக்கும்

செதில்செதிலாய் பெயின்ட் உதிர்ந்த

பழைய சைக்கிள்தான் அவர்சொத்து

“புத்தம்புது கார் ஒன்றில்

மொத்தக்கடை முதலாளி

பவனிதான் வந்தாராம்

அண்ணாச்சி பார்த்தாராம்

அடுத்த இலக்கு அந்தக்காராம்”

நாள்முழுக்க ஆபீசில் வேலைசெய்து

நம்மால் முடிந்தது இந்த ஸ்கூட்டர்

அதுகூட எங்காச்சும் வழியிலே

ரிப்பேர் ஆகி நிற்குமோ?

பெட்ரோல் தீர்ந்து போகுமோ?

பயந்து பயந்து ஆபீசுக்கு

பயணிக்கிறேன் தினந்தோறும்

யாரிடமாவது சொல்லி வைத்து

பழைய ஸ்கூட்டர் விலைக்கு வந்தால்

எங்காவது பணம் புரட்டி

இதற்குப் பதில் வேறு ஸ்கூட்டர்

இன்னும் இரண்டு மாதத்தில்

எப்படியும் வாங்க வேணும்

படித்து முடித்ததும் ஒரு விஷயம் நமது புத்திக்கு உறைத்தது. அதாவது படித்து முடித்து மாதச் சம்பளத்துக்கு வேலை செய்து  ஆயுள் முழுக்க உழைத்தாலும் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவது சுலபமல்ல. ஆனால் ஏதோ ஒரு வியாபாரம் செய்ய முனைந்தால் நிச்சயமாக வாழ்க்கைத்தரம் மாறும் என்று தோன்றியது.

சிறந்த மனோபாவத்தை பெறுவது எப்படி?

9 ஆக

மனிதனின் மனோபாவம் மிகவும் முக்கியமானது. அதுதான் வாழ்க்கையில் ஒருவன் வெற்றிபெறவும், நினைத்ததை சாதிக்கவும் உதவுகிறது. ஆனால் மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் அதையெல்லாம் கவனிக்க நேரம் எங்கே இருக்கிறது? என்றுதானே நினைக்கிறீர்கள். ஒரு மனிதனுடைய சூழ்நிலைக்கேற்பவும், அவன் பழகும் மனிதர்களுக்கேற்பவுமே அவனுடைய மனோபாவம் உருவாகிறது.

நல்ல மனோபாவம் என்பது நம்முடைய மனத்தை நல்ல ஆரோக்கியமான நிலையில் வைத்துக் கொள்வதுதான். சிலர் தாங்கள் பேசும் வார்த்தைகளின் மூலமாகவே தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுவது, கேட்பது போன்ற செயல்களால் ஒரு விரும்பத்தகாத எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு துன்பத்தில் உழல்கிறார்கள்.

வெற்றி பெற வேண்டுமா? கடினமாக பயிற்சி செய்யுங்கள்!  என்ற தலைப்பில் கடந்த இடுகையில் சொன்னது போல சிறந்த மனோபாவத்தையும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கொண்டுவர முடியும்.

நமக்கு மனம் என்ற மாபெரும் சக்தியைப் பற்றிய அரிச்சுவடியைக் கற்றுக் கொள்ள ஆதாரமாக இருந்தவர் பதினாறு கவனகர் என்று அழைக்கப்படும் திரு இரா. கனகசுப்புரத்தினம் அய்யா அவர்கள். அவருடைய புத்தகங்களும், ஒலிநாடாக்களும், நேரடி சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நமக்கு மனதின் தன்மையைப் பற்றி பல விஷயங்களைப் புரிய வைத்தன. ஆன்மீகத்திலும் நமக்கு மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது அவருடைய கருத்துக்கள்தான்.

நமது மனோபாவம் எப்படி நமது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்ட அவர் பல நிகழ்ச்சிகளைச் சொல்லுவார். ஒரு முறை பழம்பெரும் பாடகர் திரு T.M. சௌந்திரராஜன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்ததாம். அப்போது திரு சௌந்திரராஜன் அவர்கள், தான் சினிமாவில் நிறையப் பாடல்களைப் பாடி பெரும்புகழ் சம்பாதித்திருந்தாலும், தற்போது தனக்கு மனதில் நிம்மதியில்லை என்றும், குடும்பத்திலும் சந்தோஷம் தொலைந்து போனதாகவும் சொல்லி வருத்தப்பட்டாராம்.

அதற்கு கவனகர் அய்யா அவர்கள், “நீங்கள் பாடிய பாடல்களிலேயே உங்களுக்குப் பிடித்த பாடல் எது?” என்று கேட்டாராம். ஒருதலை ராகம் படத்தில் வரும் `நானொரு ராசியில்லா ராஜா’ என்ற பாடலை தனக்குப் பிடித்த பாடலாக குறிப்பிட்டதோடு அதை உருக்கமாக அனுபவித்து பாடியும் காட்டியிருக்கிறார் திரு T.M. சௌந்திரராஜன் அவர்கள். அதைக் கேட்டு கவனகர் அய்யா அவர்கள் சிரித்து விட்டாராம். ஏன் சிரிக்கிறீர்கள் என்று TMS கேட்டாராம்.

“இதுதான் உங்களது பிரச்சினை. நீங்கள் தமிழக முதல்வராக இருந்த, புரட்சித்தலைவர் என்று போற்றப்படும் திரு எம்.ஜி.ஆர் அவர்களுக்காக சினிமாவில் எத்தனையோ எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி இருக்கிறீர்கள். அந்தப் பாட்டுக்கள் மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றார். அரசியலிலும் அசைக்க முடியாதவராக கோலோச்சினார். அந்தப் பாடல்களையெல்லாம் விட்டு விட்டு, ஒரு சோகப் பாடலை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். அதை மிகவும் அனுபவித்து வேறு பாடுகிறீர்கள். உங்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும்?” என்றாராம் கவனகர்.

“எனக்கு எது மிகவும் பிடிக்கிறதோ, அதைத்தான் சொன்னேன்” என்றாராம் TMS அவர்கள்.

“உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் நினைக்கும் எண்ணங்கள், பேசும், கேட்கும் வார்த்தைகள், உங்கள் மனத்தில் பதிந்து, அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி உங்களுக்கு நல்லதையோ அல்லது கெட்டதையோ உண்டாக்குகிறது. ஆகவே நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டாக வேண்டுமென்றால், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளையே கேளுங்கள். நல்ல விஷயங்களையே பேசுங்கள், நினையுங்கள்” என்றாராம் கவனகர்.

அத்தோடு “இன்றிலிருந்து தினமும் இந்தப் பாடல்களை மட்டும் கேட்டு வாருங்கள்” என்று சில ஆடியோ கேசட்களைக் கொடுத்தாராம். அவை அத்தனையும் T.M. சௌந்திரராஜன் அவர்கள் பாடிய சினிமா பாடல்கள்தானாம். தன்னம்பிக்கையும் எழுச்சியும் ஊட்டும் பாடல்கள்.

அதற்கு கொஞ்ச நாள் கழித்து திரு T.M. சௌந்திரராஜன் அவர்கள் கவனகர் அய்யா அவர்களை தொடர்பு கொண்டாராம். “நீங்கள் சொன்னபடியே செய்தேன். இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். குடும்பத்திலும் சந்தோஷம் பொங்குகிறது. தமிழக அரசு என்னை இயல், இசை, நாடகத்துறைக்குத் தலைவராக நியமித்திருக்கிறது. நான் இப்போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாராம். இதுதான் மனத்தின் வலிமை.

சில நாட்களுக்கு முன், 22.07.2012 அன்று, விஜய் டி.வி.யில் கோபிநாத் அவர்களின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில்கூட முப்பது வருடங்களுக்கு முந்தைய சினிமாப் பாடல்களைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது. ஒவ்வொருவர் மனதிலும் எந்த எந்தப் பாடல் சந்தோஷத்தையோ அல்லது சோகத்தையோ ஏற்படுத்துகிறது என்பதை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டார்கள்.

சிலருக்கு தன்னை அறியாமலே ஒரு சில பாடல்கள் மனதில் பதிந்து ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் எந்த மாதிரியான பாடல்களைக் கேட்க வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறது. நல்ல வார்த்தைகளையே கேட்போம் என்று தீர்மானித்துக் கொள்ள முடியும். எனவே சிறந்த மனோபாவத்தை பெறும் சக்தி நம்மிடமே இருக்கிறது.

நேர்மறை சிந்தனையாளர்களுடன் பழகுதல், அதற்கான கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுதல், ஒலிநாடாக்களைக் கேட்டல், வீடியோவில் தன்னம்பிக்கை தரும் உரைகளைக் கேட்டல், நல்ல புத்தகங்களைப் படித்தல் போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொண்டால் விரைவிலேயே சிறந்த மனோபாவம் கொண்டவர்களாக நாம் மாற முடியும்.

ஐன்ஸ்டின் சொன்ன நகைச்சுவை!

20 ஜூலை

அறிவியலில் முன்னேறிச் செல்கின்ற மனிதன்

       ஆண்டவனின் ரகசியத்தைக் காண விழைந்து

அறிந்துகொண்ட கடவுளணு கண்டுபிடிப்பு – யாவரும்

       வாய்பிளந்து அதிசயிக்கும் மாபெரும் சாதனையே!

ஒன்றின் மேலொன்றாக தத்துவங்கள் பலபேசி

       உரைக்கின்ற பொருளாதார நிபுணர்குழு – வானுயர்ந்த

குன்றின் மேலேறிச் செல்கின்ற விலைவாசி(யை)

       குறைக்கின்ற வழிகாண முடியாதது வேதனையே!

கவிஞர் கடிவேலு ஈமெயில் மூலம் அனுப்பிய கவிதையைப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். நமது சென்ற இடுகைகள் ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு மற்றும் விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும் ஆகிய இரண்டையும் படித்த பின் இந்த கவிதையை எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது.

அவற்றை படிக்க இங்கே சொடுக்கவும்

ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு

விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும்

இந்த இரண்டு இடுகைகளையும் நான்கு நான்கு வரிகளில் அடக்கிவிட்ட அவருடைய திறமையை நினைத்து வியந்து கொண்டிருக்கும் போது, போன் ஒலித்தது. கவிஞர் கடிவேலுதான் பேசினார். இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவதாக தெரிவித்தார். நமக்குள் மெலிதான ஒரு பயம் ஏற்பட்டது.

இந்த மனிதர் வந்தால் ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்பார். பதிலுக்கு நாம் ஏதாவது கேட்டால் புரியாத வகையில் ஏதாவது சொல்லிவிட்டுச் செல்வார். ‘இன்னிக்கி பொழுது இவங்கூடத்தானா? என்ற நடிகர் வடிவேலுவின் ஒரு காமெடி வசனம் ஞாபகத்துக்கு வந்தது. சரி வரட்டும் பார்க்கலாம் என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவருக்காக காத்திருந்தோம்.

சரியாக தேநீர் இடைவேளையின் போது வந்தார் கவிஞர் கடிவேலு. உமது கவிதை நன்றாக இருந்தது என்று பாராட்டினோம். உமது கேள்வியும் சிறப்பாக இருந்தது என்றார் பதிலுக்கு. எதைப் பற்றி பேசுகிறார் என்று சட்டென்று புரியாததால் “எதைச் சொல்கிறீர்?” என்று கேட்டேன்.

‘நீயா நானா விவாதத்தில் நடந்த விஷயங்களை மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளில் ஒன்றாக ஒவ்வொருவரும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்; அதற்குரிய வாய்ப்புக்கள் நம் நாட்டில் நிறைய இருக்கின்றன என்றும் ஏன் எல்லோரும் தங்களால் முடிந்த அளவில் பகுதி நேரமாக ஏதாவது ஒரு வியாபாரம் செய்யக்கூடாது? என்றும் எழுதியிருந்தீரே, அதைத்தான் சொல்கிறேன்’ என்றார்.

“ஓ! அதுவா? மிக்க நன்றி” என்றேன். அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று மனதிற்குள் திக் திக் என்று அடித்துக் கொண்டது.

ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு இடுகையில் உமக்குப் பிடித்த விஞ்ஞானி ஐன்ஸ்டினைப் பற்றி எழுதியிருந்தீர் அல்லவா? அவர் சொன்னதாக நான் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது’ என்றார்.

அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தோம். மீண்டும் அவரே தொடர்ந்தார்.

‘உதாரணமாக வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதுவே சிறந்த வழிகாட்டுதல் ஆகும். இது ஐன்ஸ்டின் சொன்னது. அது போல நீர் எழுதியுள்ள விஷயத்தை நீரே முதலில் செய்து வெற்றி பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டும்’ என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நகைச்சுவையாகச் சொன்ன இன்னொரு விஷயம் நம் ஞாபகத்துக்கு வந்தது.

சூடேறியுள்ள ஒரு அடுப்பில் ஒரு நிமிடமே கை வைத்தாலும் ஒரு மணி நேரமானது போலத் தோன்றும். ஆனால் ஒரு அழகான பெண்ணிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு நிமிடம் போலத் தோன்றும். அதுதான் ரிலேடிவிட்டி.

சூடேறியுள்ள அடுப்பில் கை வைக்க வேண்டாம். கவிஞர் கடிவேலுவிடம் ஒரு நிமிடம் பேசினாலே நமக்கு ஒரு மணி நேரமானது போலத்தான் தோன்றுகிறது.

விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும்

19 ஜூலை

சென்ற ஞாயிற்றுக்கிழமை (15.07.12) விஜய் டி.வி.யில் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட்து. அதாவது இப்போதைய விலைவாசி உயர்வு ஏன் ஏற்பட்டது, அது எப்படி நம்மைப் பாதிக்கிறது என்பது பற்றி கோபிநாத் அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் IT போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், சாதாரண பொதுமக்களும், சிறப்பு விருந்தினர்களாக சில பொருளாதார நிபுணர்களும், பொருளாதார பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சாதாரணமாக சிறப்பு விருந்தினர்கள், பாதி விவாதத்திற்கு பிறகுதான் விவாதத்தில் பங்கேற்பார்கள். மிக முக்கியமான இந்த விவாதத்தில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பங்கேற்றது ஒரு விசேஷம். தங்கத்தில் முதலீடு, பணவீக்கம் போன்ற பல விஷயங்கள் பேசப்பட்டன. அதில் கலந்து கொண்டவர்கள், பெரும்பாலும் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் விலையேறியிருப்பதாக தெரிவித்தார்கள். அதனால் தினசரி வாழ்க்கை நடத்துவதே மிகவும் கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார்கள்.

அதாவது அரிசி, காய்கறி, கீரை, பழங்கள், பால், போன்ற அத்தியாவசியமான உணவுப் பொருள்களும், பஸ் டிக்கெட், ஆட்டோ, பெட்ரோல் போன்ற போக்குவரத்திற்கான அனைத்தும், கல்விக் கட்டணம், மின்சாரக் கட்டணம், கியாஸ் சிலிண்டர் விலை போன்றவைகளும், ஓட்டல் சாப்பாடு உட்பட அனைத்துமே விலை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்கள். ஒருவர் மாட்டுக்குத் தேவையான தவிடு, புண்ணாக்கு போன்றவையும் விலையேறியிருப்பதாக சொன்னார்.

இந்த விலையேற்றத்திற்கான காரணங்களை பொருளாதார நிபுணர்கள் அலசினார்கள். வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தது ஒரு காரணம் என்றும் இந்திய ரூபாயில் மதிப்பு குறைவது ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டார்கள். டெபாசிட்டுக்கு 12% அளவில் அதிக வட்டி கொடுத்தாலும் முதலீடு செய்ய ஆளில்லை என்று சொன்னது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. பெட்ரோல் விலை உயர்வும் இதில் முக்கியப் பங்குவகிக்கிறது என்று அவர்கள் சொன்னதை சரியென்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பொருளாதாரம் படித்த பெட்ரோல் பங்க் சொந்தக்காரரும் ஒருவரும் அதில் பங்கேற்றார். அவர் சொன்ன விஷயம் முக்கியமானது. அதாவது அரசாங்கம் நினைத்தால் பெட்ரோல் விலையை நிச்சயமாக குறைக்க முடியும் என்றார். பெட்ரோலின் அடக்க விலை 46 ரூபாய் தான் என்றும் மீதியெல்லாம் அரசாங்க வரியென்றும், அதைக் குறைத்தால் பெட்ரோல் விலை கணிசமாகக் குறையும் என்றும் அது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.

உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணையின் விலை 111 டாலரிலிருந்து 86 டாலராக் குறைந்த போதும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததின் காரணமாக இங்கு பெட்ரோல் விலையை அதிகப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் காரணம் சொல்கிறார்கள். இதற்குத் தீர்வாக கச்சா எண்ணையின் விலை குறையும் போது சீனா செய்வது போல நாமும் கச்சா எண்ணையை வாங்கி சேமிக்கலாம் என்று ஒருவர் சொன்னது நல்ல தீர்வாக அமையலாம்.

ஒவ்வொரு வருடமும் நம் நாட்டின் பட்ஜெட்டில், பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது. அதனை சரி செய்ய அரசாங்கம் கரன்சியை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது. அப்படி பணப்புழக்கம் அதிகரித்தாலும் அதற்கேற்ப உற்பத்தி அதிகமாகாத போது விலைவாசி கட்டாயம் உயரும் வாய்ப்புள்ளது என்பது பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்களின் கருத்து.

அத்தோடு தேவை அதிகரித்து உற்பத்தி குறைந்தாலும் விலைவாசி உயரும் என்பதும் பொருளாதார நிபுணர்களின் கருத்து. உதாரணமாக இப்போது மின்சாரத்தின் பயன்பாடு மிக அதிகமாக ஆகியிருக்கிறது. ஆனால் அதற்கேற்ப மின்சார உற்பத்தி அதிகமாகவில்லை.

பொருளாதாரத்தை சரியாக கையாளாததும் ஒரு காரணம் என்று அழகேச பாண்டியன் என்பவர் கூறினார். அதாவது எண்ணைக் கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குவதால் பெட்ரோல் விலையேற்றம் தவிர்க்க முடியாதாதது என்று காரணம் சொல்லப் படுகிறது. ஆனால் இழப்பீடு கிடைத்தவுடன் அதே எண்ணைக் கம்பெனிகள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தது அதிசயமல்லவா? என்று அவர் கேட்டது சிந்திக்க வைத்த கேள்வி.

கடந்த ஐந்து வருடங்களில் சுமார் இருபது லட்சம் கோடி ரூபாயை வரிவிலக்கு என்ற பெயரில் அரசாங்கம் விட்டுக் கொடுத்திருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு நாட்டில் கல்வி, மருத்துவம், மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தாராளமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒருவர் சொன்னது யோசிக்க வேண்டிய விஷயம்.

விலைவாசியைக் கட்டுப் படுத்துவதற்கான காரணங்களை அலசியபோது சில அற்புதமான திட்டங்களை சிலர் முன் வைத்தார்கள். உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் அதன் உற்பத்தி விலை பத்து ரூபாய்தான். ஆனால் அது பல கைகள் மாறி கடைக்கு வரும்போது முப்பத்தைந்து ரூபாய் அல்லது நாற்பது ரூபாய் ஆகிறது. அதாவது உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைப்பதை விட இடைத்தரகர்களுக்கு மூன்று மடங்கு பணம் போகிறது. எனவே இடைத்தரகர்களை விட்டுவிட்டு ஏன் நேரடி விற்பனை முறையை கொண்டு வரக்கூடாது என்று ஒருவர் கேட்டார். மிகவும் அர்த்தமுள்ள கேள்வி.

மாற்றம் என்பது ஒன்றே மாற்ற முடியாதது. அதனால் மாற்றத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும், மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்யலாம், ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், கூடுதல் நேரம் வேலை செய்து அதிகப்படியான செலவுகளுக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கலாம் என்றும் ஒருவர் சொன்னார். மற்றொருவர் தரமான பொருளுக்கு அதிக விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது தவிர்க்க முடியாதது, விலைவாசி உயர்ந்தால் நம்முடைய வருமானமும் உயரும் என்று ஒரு சாரர் நினைக்கலாம். ஆனால் அவர்கள் சம்பளமாக வாங்கும் பணத்தின் மதிப்பும் குறைந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் சொன்னது மறுக்க முடியாத உண்மை.

இதைப் பார்த்த போது நமக்கு சில கேள்விகள் எழுந்தன. விலையேற்றத்தினால் வியாபாரிகள் பாதிக்கப் படுவதில்லை, அவர்கள் மற்றவர்கள் தலையில் சுமையை ஏற்றி விடுகிறார்கள் என்று ஒருவர் சொன்னார். அப்படியென்றால் ஏன் எல்லோரும் தங்களால் முடிந்த அளவில் ஏதாவது ஒரு வியாபாரம் (பகுதி நேரமாக) செய்யக்கூடாது?

ஒரு பெண், தனக்கு மாதம் 3500 ரூபாய்தான் சம்பளம் என்றும், அதில் தன்னுடைய குழந்தைக்கு பால் வாங்கக்கூட தன்னுடைய சம்பளம் போதவில்லை என்று அழுது கொண்டே சொன்னார். ஒரு பள்ளி ஆசிரியைக்கே இந்த நிலமையா என்று மனம் வலித்தது. இன்னொரு பெண்மணி சொல்லும் போது தன் கணவர் மட்டுமல்ல, தானும் வேலை செய்தால்தான் தினசரி சாப்பாடே சாப்பிட முடிகிறது என்றார். அதுவும் இரவு பதினோரு மணிக்குத்தான் சாப்பிட முடியும் என்றபோது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று எண்ணத் தோன்றியது.

பஸ் கட்டணத்தில் வெறும் 7.50 ரூபாய் மிச்சப் படுத்துவதற்காக சாதாரண வெள்ளை போர்டு பஸ் வருவதற்காக அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை கால் கடுக்க பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக ஒருவர் சொன்னது வேதனையான விஷயம். இன்னொருவர் கூறும்போது தினமும் 10 ரூபாய் மிச்சப் படுத்தலாம் என்று அலுவலகத்துக்கு நடந்தே போவதாகச் சொன்னது இன்றைய வாழ்க்கையின் யதார்த்தத்தை எடுத்துக் காட்டியது.

மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த தகுந்த வாய்ப்புகள், நம் நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறது. பயம், தயக்கம், கூச்சம், தோல்வி மனப்பான்மை போன்ற பலவித சுயமுன்னேற்றத் தடைகளை உடைத்தெறிந்து, வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டு தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் இது போன்ற விலையேற்றத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வளமான வாழ்க்கைக்கு வழி செய்து கொள்ளலாம்.

இது போன்ற ஒரு விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டதற்காக கோபிநாத் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

பாசத்தைக் காட்டவும் பணம் வேண்டும்

13 ஜூன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.06.2012) இரவு விஜய் டிவியில் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணன் தங்கை பாசம் பற்றிய கலந்துரையாடல் ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. கல்யாணமான பிறகு அண்ணன் தங்கை இடையேயான பாசத்தில் எப்படி விரிசல் ஏற்படுகிறது என்பதை பலரும் அழுகைக்கிடையே விவரித்த விதம் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

நம்முடைய கலாச்சாரத்தில் அண்ணனுக்கும் தங்கைக்கும் உள்ள உறவுமுறை மிகவும் போற்றத்தகுந்தது. தங்கை கல்யாணம் முதல் அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு காது குத்தும் போதும், அவர்களின் திருமணத்தின் போதும், பெண் குழந்தையாக இருந்தால் வயதுக்கு வரும் போதும், தாய்மாமன் என்ற முறையில் அண்ணன் செய்யும் சீர் செனத்திகள் முக்கியமானவையாக கருதப்படும்.

கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் பலருக்கும் தங்கள் அண்ணனிடமோ, தங்கையிடமோ ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்கள் ஞாபகத்திற்கு வந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். பல மனஸ்தாபங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது பணம்தான் என்பது அந்த நிகழ்ச்சியின் மூலம் புரிந்தது.

அதில் ஒரு அண்ணன் அவசரத்திற்காக தங்கையிடம் வாங்கிய பத்து பவுன் தங்கச் சங்கிலியை இன்னும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இத்தனைக்கும் அந்த தங்கச் சங்கிலியை தன் கணவருக்கோ, கணவர் வீட்டாருக்கோ தெரியாமல் தங்கை கொடுத்திருந்தாராம்.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு கணவன் மனைவியிடையே நடந்த ஒரு உரையாடல் எப்படி வேடிக்கையாக முடிந்தது என்று ஒரு நண்பர் சொன்னார்.

அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவி கண் கலங்கியதைப் பார்த்து விட்டு என்ன என்று விசாரித்திருக்கிறார் கணவர். அவர் மனைவி அழுதுகொண்டே சொன்னாராம்.

“என் அண்ணன் என் மீது எப்படியெல்லாம் பாசத்தைக் காட்டினார் என்று நினைக்கும்போது எனக்கு அழுகையாக வருகிறது. அவருக்கு நான் எதுவுமே செய்யவில்லை என்றும் வருத்தமாக இருக்கிறது.”

இதைக்கேட்டவுடன் கணவன் சொன்னாராம்.

“நீ எதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது சரிதான். ஆனால் உன் அண்ணியை நினைத்துப் பார்த்தாயா? ஒரு முறை இங்கு வந்த போது அண்ணன் வந்திருக்கிறார் என்று நீ ஆசையாக பன்னீர் பிரியாணி செய்து கொடுக்க, அதைச் சாப்பிட்டு விட்டு தன் மனைவியிடம் அதைப்பற்றி சிலாகித்துப் பேச, உன் அண்ணி பொறாமையால் உன்னை என்ன பாடுபடுத்தினாள் என்பது ஞாபகமில்லையா?”

இதைக் கேட்டவுடன் அந்த மனைவி ஒன்றுமே பேசவில்லையாம். அண்ணனுக்குத் திருமணம் ஆகிவிட்டால் பிறகு தங்கை என்ற பாசத்தைக் காட்டக்கூட வழியில்லாமல் போய்விடும் என்பது அப்போதுதான் அவருக்கு புரிந்ததாம்.

இத்துடன் விஷயம் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கணவர் இப்போதும் புலம்புகிறார். ஏனென்றால் சிறிது நேரம் கழித்து மனைவி சொன்னாராம்.

“பணமாகவோ அல்லது பிரேஸ்லெட் மாதிரி தங்க நகையாகவோ வாங்கிப் போட்டால் அப்போது என்னுடைய அண்ணி ஒன்றும் சொல்லமாட்டார்கள்.”

இதைக்கேட்டதும் கணவருக்கு திக் என்று இருந்ததாம். இப்போது தங்கம் விற்கும் விலையில் பிரேஸ்லெட்டா?

சரி, மனைவியுடைய விருப்பத்தை நிறைவேற்றலாம் என்று கடைக்குக் கூட்டிப் போய் இருக்கிறார். அங்கு தன்னுடைய அண்ணனுக்கு பிரேஸ்லெட் வாங்கியது மட்டுமில்லாமல், தனக்கும் இரண்டு வளையல் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கணவருக்கு வேட்டு வைத்துவிட்டாராம் மனைவி.