என்ன ஆயிற்று இந்த கவிஞர் கடிவேலுவுக்கு? கொஞ்ச நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லையே! கடைசியாக புத்தாண்டு கவிதை எழுதி அனுப்பியதோடு சரி. அதன் பிறகு எங்கே போனார், என்ன ஆனார் என்று எதுவுமே தெரியவில்லை. நமக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் கொஞ்ச நாட்களாக இடுகைகளை எழுத இயலாமல் போய் விட்டது. நாமும் கவிஞரை கொஞ்சம் மறந்து விட்டோம் என்பது உண்மைதான்!
ஆனால் நமது இடுகை வெளியான உடனேயோ அல்லது திண்ணையில் நமது சிறுகதை வெளியான உடனேயோ உடனுக்குடன் அதைப் பற்றிக் கருத்து தெரிவித்து விடுவார் நமது கவிஞர். ஆனால் நமது சென்ற இடுகையான ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ பற்றிக் கூட இதுவரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே கவிஞருக்கு என்ன ஆயிற்று என்று நமக்கு கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. ஒருவேளை உடம்பு சரியில்லாமல் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறாரோ? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையில் தவிக்கிறாரோ? இவ்வளவு நாள் ஒரு தகவலும் இல்லாமல் அவர் இருந்ததில்லையே!
பலவிதமாக யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை. ரொம்பவும் குழப்பமாகவே இருந்தது. வெளிநாடு எங்காவது சென்று விட்டாரோ? அப்படிப் போனால் நம்மிடம் சொல்லாமல் போக மாட்டாரே? இப்போது என்ன செய்யலாம்? அவருடைய செல்லுக்கு போன் போட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நமக்கு பதற்றமாகி விட்டது. என்னதான் ஆயிற்று? அவருடைய வீட்டுக்குப் போய் பார்க்கலாமா? அதுதான் சரி! நேரே அவருடைய வீட்டுக்குப் போய் பார்த்துவிட வேண்டியதுதான். உடனே ஆபீஸிலிருந்து கிளம்பி விட்டேன்.
நான் அவருடைய வீட்டை அடைந்த போது காலை மணி பதினொன்றைத் தாண்டி விட்டது. காம்பவுண்டைத் தாண்டி காலிங் பெல்லை அடிக்கலாமா என்று யோசித்த போதுதான் கவனித்தேன். கதவில் பூட்டு தொங்கியது. வீடு பூட்டி இருக்கிறது. சரி, பக்கத்தில் விசாரிக்கலாம் என்று பக்கத்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து வயதான பெரியவர் ஒருவர் கதவைத் திறந்தார்.
“ஐயா, பக்கத்து வீட்டில் கவிஞர் கடிவேலு என்று ஒருவர் இருந்தாரே, அவரைப் பார்க்க வந்தேன். ஆனால் வீடு பூட்டி இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது விபரம் தெரியுமா?” என்றேன்.
“ஓ! கவிஞரா? என்னுடைய நண்பர்தான். அவர் குடும்பத்தோடு சொந்த ஊர்ப்பக்கம் போயிருக்கிறார். இன்னும் பத்து இருபது நாள் கழித்துத்தான் வருவார்கள்” என்றார்.
“போய் ரொம்ப நாள் ஆகி விட்டதோ?” என்று கேட்டேன்.
“ஆமாம்! ஏதோ வியாபார விஷயமாக அங்கேயே கொஞ்ச நாள் இருக்க வேண்டியதிருக்கும் என்றார்” என்றார் பெரியவர்.
“ரொம்ப நன்றி ஐயா! மறுபடி திரும்பி வந்தவுடன், நான் வந்து போனதாகச் சொல்லுங்கள்” என்று என்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்தேன்.
“எப்போதாவது இடையில் போன் செய்தால்கூட நீங்கள் வந்ததை அவரிடம் சொல்கிறேன்” என்றார். நன்றி சொல்லி விடை பெற்றேன்.
கவிஞர் மிகவும் தீவிரமாக அவருடைய வியாபார விஷயங்களைக் கவனிக்கிறார் என்பது புரிந்தது. அவருடன் நாம் நடத்திய உரையாடல்களைப் பற்றி முந்தைய இடுகைகளில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தோம் அல்லவா?. இடையில் திடீரென்று ஒருநாள் வந்து டெங்கு நோயிலிருந்து மீண்ட இளைஞரைப் பற்றிச் சொல்லிவிட்டு இரண்டு ஒலி வடிவ உரையையும் கொடுத்து கேட்கச் சொல்லி இருந்தார். அதையும் ஒரு இடுகையில் சொல்லியிருந்தோம்.
அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்? என்ற நமது முந்தைய இடுகையில் நீர்ப்பறவை என்ற படத்தைப் பற்றி பேசிவிட்டு, அதுகூட ஒருவகையில் விளம்பரம்தான் என்று சொன்னார். அது போல நாமும் விளம்பரம் செய்யலாம் என்று ஒரு ஆசை வந்தது. அதனால்தான் விஜய் டிவியில் நாம் ரசித்த ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ என்ற நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருந்தோம். அதுவும் ஒருவகையில் விளம்பரம் போலத்தானே. ஆனால் கவிஞர் சொன்னது போல் விளம்பரம் செய்தால் எப்படி பணம் வரும் என்பது புரியவில்லை.
இன்னும் பல விஷயங்களைப் பற்றி நமக்கு ஆவல் ஏற்பட்டது. ஆனால் அவர் மறுபடி தொடர்பு கொண்டால்தான் கேட்க முடியும். இப்போது கவிஞரை மீண்டும் எப்போது காண்போம் என்று ஒரு ஏக்கமே உண்டானது. சீக்கிரமே அவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.
காத்திருப்போம். அதுவரை அவருடன் நாம் நடத்திய உரையாடல்களை நினைவு படுத்திக் கொள்ளலாம்.
கடந்த இடுகைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்
டெங்கு நோயிலிருந்து மீண்ட இளைஞர்! ஓர் அதிசயம்!