இதற்கு முந்தைய இடுகையில் இல்லை என்ற சொல் வரும் ஒரு வெண்பாவை பற்றி ஒரு விளக்கம் எழுதி இருந்தேன். அதில் இல்லை என்ற சொல் வரும் இரண்டு திருக்குறள்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு இன்னும் ஒரு திருக்குறள் என் ஞாபகத்துக்கு வந்தது
அறிவுடைமை அதிகாரத்தில் 429 வது குறள்
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
‘வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை’ என்று இதற்கு அர்த்தம் சொல்லியிருக்கிறார் மு. வரதராசன் அவர்கள்.
பின்னால் வரும் ஒரு விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஒருவருக்கு திடீரென்று அதிர்ச்சி தரக்கூடிய அல்லது அஞ்சி நடுங்க வைக்கக்கூடிய ஒரு துன்பம் வராது என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது இன்னும் சில தமிழறிஞர்களின் கூற்று.
ஆனால் என் கேள்வி என்னவென்றால் பின்னால் நடக்கப் போவதை ஒருவர் எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான். இது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் அல்லவா?.
அந்தக் காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தங்களுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக பின்னால் நடக்கப் போகும் விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் அது சாதாரணமான மற்றவர்களால் எப்படி முடியும் என்பது தெரியவில்லை.
இன்றைய கால கட்டத்தில் ஜோதிடம் என்று ஒன்று இருக்கிறது. அதன் மூலம் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இந்த ஜோதிடத்தைப் பற்றியா இந்த குறளில் சொல்லி இருப்பார். அவருக்கு ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இருப்பதாக திருக்குறளில் எங்காவது சொல்லியிருக்கிறாரா?.
அதனால் இந்த குறள் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவதாக எனக்கு தோன்றுவது என்னவென்றால் ஒரு செயலின் முயற்சியை முன்னெடுக்கும் போது ஏதாவது ஒரு குறிக்கோள் உள்ளவன் அல்லது ஒரு எதிர்பார்ப்பு உள்ளவன், பின்னால் வரும் அதன் விளைவை முன்கூட்டியே யோசித்து திட்டமிடுவதைப் பற்றி குறிப்பிடுவதாகவே கருதுகிறேன்.
இப்படி நடந்தால் இது போன்ற விளைவுகள் வரும். அதை இப்படி சமாளித்துக் கொள்ளலாம் அல்லது வேறு மாதிரி நடந்தால் வரும் விளைவுகளை வேறுவகையில் சாமாளித்துக் கொள்ளலாம் என்று முன்கூட்டியே திட்டமிடுவது அல்லது தீர்மானிப்பது என்பதையே இங்கு அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.
இப்பொழுது திட்டமிடலில் திட்டம் ஒன்று, திட்டம் இரண்டு, திட்டம் மூன்று என்றெல்லாம் சொல்கிறார்களே, அது போன்று ஒரு செயலை செய்யும் போது அதன் விளைவு இப்படி இருந்தால் என்ன செய்வது அல்லது வேறு விதமாக இருந்தால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதன்படி தனக்கு பாதிப்பு வராமல் காப்பாற்றிக் கொள்ளும் அறிவு உள்ளவர்களை இங்கு அவர் குறிப்பிடுகிறார்.
அப்படி திட்டமிட்டு முன்கூட்டியே நடக்கப் போகும் விளைவுகளை அறிந்து அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்பவர்களுக்கு, பின்னால் நடப்பது எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்கு துன்பம் விளைவிக்காது. அதாவது அவர்களை அது அதிர்ச்சிக்கு உள்ளாக்காது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
******
இப்பொழுதுதான் நான் தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய அம்மா வந்தாள் என்ற நாவலைப் படித்து முடித்தேன். இந்தக் குறளை அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களோடு ஏனோ சம்பந்தப்படுத்தி பார்த்தேன்.
அதில் வரும் கதாநாயகன் பெயர் அப்பு. அவனுடைய அம்மா அலங்காரத்தம்மாள். அவள் தான் செய்யும் பாவத்தை போக்கிக் கொள்வதற்காகவே எட்டு வயதான அப்புவை வேதம் படிப்பதற்காக 16 வருடங்களுக்கு முன்பு சித்தன்குளத்துக்கு பாடசாலைக்கு அனுப்புகிறாள்.
ஆனால் அவனோ 16 வருடங்கள் கழித்து பாடம் முடிந்து, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வரும்போது, அங்கு நடக்கும் விஷயங்கள் அவனுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவன் வேதம் படித்தவன்தான், புத்திசாலி, அறிவு உள்ளவன்தான் ஆனால் இப்படியெல்லாம் இருக்கலாம் என்று தன் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே யோசித்து பார்க்கத் தோன்றாததால் அவனுக்கு அந்த அதிர்ச்சி உண்டாகிறது.
அவன் ஒரு வேத வித்தகனாக, ரிஷியாக ஒரு நெருப்பு போல் வருவான், அதில் தன்னுடைய எல்லா பாவங்களையும் பொசுக்கிக் கொள்ளலாம் என்று அலங்காரத்தம்மாள் நம்புகிறாள். அவளுக்கு அவனிடம் அப்படி ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது.
நீ ரிஷியாகிட்டே, உன் காலில் விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு நினைச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே!
என்பாள் அவள்.
மறுபடி சித்தன்குளத்துக்குச் செல்கிறான் அப்பு. அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகம் அலங்காராத்தம்மாளுக்கு உண்டாகிறது. அதனால் சில நாட்களுக்குப் பிறகு அவள் கிளம்பி அப்புவைப் பார்க்கப் போகிறாள்.
அலங்காரத்தம்மாள் எதிர்பார்த்தபடி தன் மகன் அப்பு திரும்பி வரமாட்டான் என்று தெரிந்து விடுவதால், காசிக்குச் சென்று அங்கேயே கடைசி வரை இருந்து இறந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து பிரிந்து செல்கிறாள். ஒருவேளை அப்பு இதுபோல் இருந்தால் இது மாதிரி செய்யலாம் என்று அவள் முன்கூட்டியே யோசித்து இருப்பாளோ என்னவோ, அதனால் அவளுக்கு அது அதிர்ச்சியை அளிக்கவில்லை என்று தோன்றுகிறது.
பின் குறிப்பு:
அந்த நாவலில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு இடம் வருகிறது. அம்மாவை ரயிலில் ஏற்றிவிட்டு திரும்பி வருவான் அப்பு. அவன் வருவதைப் பார்த்து ‘அப்பு’ என்று குரல் கொடுக்கிறாள் இந்து. அப்போது அவள் சொல்வதாக தி. ஜானகிராமன் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
“அம்மா இத்….தனை அழகாக இருக்காளே! எனக்குத் தெரியவே தெரியாதே. நீ சொல்லவே இல்லியே. என்ன களை! என்ன அழகு!”
அதற்கு அப்பு பதில் சொல்கிறான்.
“அழகா இருந்தா, ரொம்ப கஷ்டம் இந்து!” என்று சுவரைப் பார்த்துக் கொண்டே நின்றான் அவன்.
இந்த நாவலின் சாரத்தை இதில் அடக்கி விடுகிறார் ஆசிரியர்.
குறிச்சொற்கள்:கவிதை, திருக்குறள், வெண்பா