தன்னுடைய நண்பர் லண்டனுக்கு இலவச சுற்றுப்பயணம் சென்று வந்ததாக கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா?
நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. காலையிலேயே கவிஞர் கடிவேலுவும் போன் செய்து ஞாபகப் படுத்தினார். சரியாக பத்து மணிக்கு சென்னை பாரிமுனையில் இருக்கும் அந்த மண்டபத்துக்கு வந்து விடச் சொன்னார்.
நான் அங்கு சென்ற போது ஒரு நீண்ட க்யூ வரிசை நின்றிருந்தது. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தார். அதனால் வரிசையில் நிற்காமல் உள்ளே நுழைந்தோம். குளிரூட்டப்பட்ட அந்த பெரிய மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேருக்கும் மேலாக கூடியிருந்தார்கள்.
யாரோ ஒருவர் வந்து தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, அன்றையக் கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு அறிமுக உரை நிகழ்த்தினார். அதுவே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருந்தது.
பின்னர் சிவப்புக் கலரில் டி-சர்ட்டும், கறுப்பு பேண்ட்டும் அணிந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் மேடையில் தோன்றினார். கூட்டத்தினருக்கு தன்னை அறிமுகப்படுத்தி விட்டு எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடனே கவிஞர் கடிவேலு, “இவர்தான், இவர்தான் சமீபத்தில் இலவசமாக லண்டன் சென்று வந்தவர்” என்றார்.
பின்பு, மேடையில் இருந்த ஒரு வெள்ளைத்திரையில் சில போட்டோக்களைக் காண்பித்தார்கள். அதில் அந்த மனிதர் சென்னையிலிருந்து விமானத்தில் கிளம்புவது, அவரை வழியனுப்ப வந்தவர்கள் யார் யார், விமானத்தில் படுத்து தூங்க வசதியான இருக்கை (பிஸினஸ் கிளாஸ் பயணமாம்) போன்ற படங்களும், பின்பு லண்டன் மாநகரில் அவர்கள் சுற்றிப்பார்த்த `லண்டன் ஐ’, `மேடம் துஸ்ஸாட் மியூசியம்’, மற்றும் பல இடங்கள் ஆகியவையும் அந்த போட்டோக்களில் இருந்தது.
அத்துடன் இவர்கள் மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் யார் யார் அந்த சுற்றுப் பயணத்திற்கு வந்தார்கள் என்றும் அந்த போட்டோக்களில் இருந்தவர்களைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.
பின்பு அவருடைய மனைவி பேசும் போது, லண்டனில் இந்த வருடம் (2012) ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதாலும், இங்கிலாந்து நாட்டின் எலிஸபெத் மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டம் என்பதாலும், லண்டன் மாநகரமே கோலாகலமாக இருந்ததாகவும், இந்த சமயத்தில் அங்கு சுற்றுலா சென்றது மிகவும் மகிழ்ச்சியளித்தாகவும் கூறினார்.
ஒவ்வொரு விஷயத்தை அவர்கள் சொல்லும் போது மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்ததையும், ஆர்ப்பரித்ததையும் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவும், புதுமையாகவும் இருந்தது. ஆனால் இன்னும் என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எதற்காக இந்தக் கூட்டம்? யாரோ வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று வந்த அனுபவத்தை கேட்டு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? இலவச சுற்றுப் பயணம் என்று வேறு கூறுகிறார்களே, எதற்கு, யார் கூட்டிப் போனார்கள்?
விடை தெரியவில்லை. சற்று திரும்பி கவிஞர் கடிவேலுவைப் பார்த்தேன். அவரோ உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார். இப்போது அவரிடம் கேட்டாலும் நிச்சயமாக பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லையென்பது புரிந்தது. அதனால் கூட்டம் முடியும் வரை பொறுமையாக இருக்கலாம் என்று முடிவு செய்து நடப்பதைக் கூர்ந்து கவனிக்கலானேன்.
மனதின் ஒரு ஓரத்தில் நமது நண்பர் மூணாறுக்கு சுற்றுலா சென்று அவஸ்தைப்பட்டு வந்த கதையும் நினைவுக்கு வந்தது.