கயவர்தம் தன்மை

14 டிசம்பர்

செவிடனும் கத்திபேசு வான்பயந்த வள்போல்
பவித்திர மாய்நடிப்பாள் தாசி – தவித்தே
இயல்புக்கு மேலாய் இருப்பதுபோல் காட்டும்
கயவர்தம் தன்மை அது

வெண்பாவின் பொருள்:

காது கேளாதவன் சத்தமாகப் பேசுவது இயற்கை. தனக்கு காது கேட்காதது போல் மற்றவர்களுக்கும் கேட்காது என்ற எண்ணத்தில் அப்படி பேசுவான்.

ஹெட்போனில் ஏதாவது பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் பேசிப் பாருங்கள். அவர் சாதாரணமாகப் பேசுவதை விட சத்தமான குரலில் உங்களுக்குப் பதில் சொல்லுவார்.

மற்றும் எந்த ஒரு விஷயத்துக்கும் மற்ற பெண்களை விட ஒரு பரத்தையானவள் ரொம்பவே அலட்டிக் கொள்வாள். அதாவது தான் ரொம்பவும் பவித்திரமானவள் என்று மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள  வேண்டும் என்ற பாவனையில் அவள் நடந்து கொள்வாள். அதுவே அவள் எப்படிப் பட்டவள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.

அதுபோல தன்னுடைய உண்மையான குணத்தை மறைத்து தன்னை மற்றவர்கள் நல்லவனாக கருத வேண்டும் என்பதற்காக நடிப்பது கயவர்களது இயற்கை குணம். அதை சரியாகப் புரிந்து கொண்டால் நாம் அவர்களிடம் ஏமாறாமல் இருக்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக