ஆங்கிலத்தில் Self Love என்று சொல்வார்கள். உங்களை நீங்களே நேசிப்பது அல்லது ரசிப்பது என்று அர்த்தம். உங்களிடம் உள்ள குறை நிறைகளை தெரிந்து கொண்டு, உங்களின் நிறைகளைப் பற்றி பெருமை கொள்ளுங்கள். மனதளவில் உங்களைப் பற்றிய உயர்வான எண்ணம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
ஒவ்வொருவருக்கும் தன்னுடைய உடம்பைப் பற்றிய தெளிவான அறிவு அவசியம். உங்களுடைய ஆரோக்கியத்தை நீங்களே கண்காணியுங்கள். யாரோ ஒரு டாக்டரிடம் ஒப்படைக்காதீர்கள். உங்கள் உடம்பைப் பற்றி உங்களுக்கு மட்டுமே அதிகம் அக்கறை இருக்கும். நீங்கள் உங்கள் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும், ஒவ்வொரு உறுப்பையும் அக்கறையுடன் கவனித்தால் அவை உங்களோடு பேசும். அதாவது அதன் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உங்களுக்கு அர்த்தம் புரியும்.
உதாரணமாக வயிறு சரியில்லையென்றால், என்ன ஆச்சு என்று அதனையே நீங்கள் விசாரிக்கலாம். அது சொல்லும்,
“ராத்திரி பதினோரு மணிக்கு அந்த மோட்டலில் சாப்பிட்டியே. அவன் ஒரு சீக்கான கோழியை பொரிச்சு கொடுத்திட்டான். அது இப்போ வயித்திலே போய் பிரச்சினை பண்ணுது” என்று.
“சரி, இப்போ என்ன பண்றது?” என்று கேட்டால்,
“பேசாம வெறும் தண்ணிய மட்டும் குடிச்சுட்டு பட்டினியா இரு. அதுவா சரியாயிடும்.”
நம் உடம்பு ஒரு பெரிய தொழிற்சாலை போல. உள்ளே நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான பிரச்சினைகளை அதுவாகவே சரி செய்து கொள்ளும். முடியாத பட்சத்தில் மட்டுமே வெளியிலிருந்து மருந்து தேவைப் படும்.
இதையே திருமூலர்
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே
என்று திருமந்திரத்தில் உரைக்கிறார்
உங்களை நீங்களே ரசிக்கக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிக எளிதாகிவிடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும்போது உங்கள் வெற்றி வெகுதூரத்தில் இல்லை. வானமே வசப்படும்.
உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.