யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்? – பகுதி 2

25 பிப்

சரியாக ஒன்றரை மாதத்திற்கு முன்னால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ என்ற தலைப்பில் ஒரு இடுகையை எழுதியிருந்தோம். அதில் அந்த நிகழ்ச்சியைப் பற்றியும், அதில் பங்கேற்ற போட்டியாளர்களைப் பற்றியும், நடுவர்கள் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் மற்றும் நடிகர் சுரேஷ் ஆகியவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

நமது முந்தைய இடுகையில், பூஜா போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டது நமக்கு வருத்தமளிப்பதாகவும், ஆனாலும் நடுவர்களின் தீர்ப்பு பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தபடியே அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம். அந்த இடுகையை மீண்டும் வாசிக்க இங்கே சொடுக்கவும். அப்போது வெளியேறிய பூஜா, ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் திரும்பவும்  போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்று, இறுதிப் போட்டி வரையிலும முன்னேறி கடைசியில் கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார். வாழ்த்துக்கள் பூஜா!

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்த வரை சில குறிப்பிடத்தக்க விஷயங்களும் இருக்கின்றன. அதாவது பதினோரு பேரை பங்கேற்பாளர்களாக வைத்து ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பூஜா போட்டியிலிருந்து வெளியேறிய போது பிரியா, பிரீத்தி, லலிதா, இளவரசன், சந்தியா என்று ஐந்து பேராக குறைந்து விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியிருந்தது. அந்த ஐந்து பேரில் லலிதா, இளவரசன் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இறுதிப் போட்டிக்கு பிரியா, பிரீத்தி மற்றும் சந்தியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஏற்கெனவே வெளியேற்றப் பட்டவர்களில் ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் இளவரசனும், பூஜாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஆக, டாப் 5 ஆக இருந்தவர்களில் லலிதாவைத் தவிர மீதி நான்கு பேரும் பூஜாவுடன் இறுதிப் போட்டியில் போட்டியிட்டனர். அதிலும் பிரீத்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் போட்டியாளர் என்ற சிறப்பைப் பெற்றார். ஆனால் அவர் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். மீதியுள்ள நான்கு பேர்களுடன் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுக்கள் நடந்து முடிந்தன.

மூன்றாவது சுற்றில் இளவரசனும், பூஜாவும் ஒரு குரூப்பாகவும், பிரியாவும், சந்தியாவும் ஒரு குரூப்பாகவும் போட்டியிட்டனர். அதில் இளவரசனை வென்று பூஜாவும், சந்தியாவை வென்று பிரியாவும் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். கடைசி சுற்றில் பூஜா செய்த புதுமையான சமையலும் அவருடைய சமயோசித அறிவும்தான் அவருக்கு இறுதி வெற்றியைப் பெற்றுத் தந்தது என்பது நிசர்சனமாகத் தெரிந்தது.

போட்டியின் நடுவே, ‘இறுதிப் போட்டிக்குத் தகுந்த டிஷ்தானா இது?’ என்று பிரியாவிடம் செஃப் தாமு கேட்டாலும், ஓட்டுப் போடும் போது, அவர் மட்டும் பிரியாவுக்கே தனது ஓட்டைப் போட்டது பார்வையாளர்களைத் திருப்திப் படுத்தத்தானோ? என்ற கேள்வி ஏனோ மனதில் எழுந்தது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் கடைசியில் வெற்றி பெற்ற பூஜாவின் மனோபாவம். நமது முந்தைய இடுகையை எழுதிய சமயத்தில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டபோது தோல்வியை ஏற்றுக் கொண்ட விதமும், இப்போது வெற்றி பெற்ற பின் காட்டிய உணர்ச்சிகரமான சந்தோஷமும் அவருடைய பக்குவத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு வெறி அவரிடம் இருந்ததைக் காண முடிந்தது. வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரிடமும் இருக்க வேண்டிய குணாம்சம் அதுவே.

நடுவர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டது போல பூஜாவுடைய புத்திசாலித்தனம்தான் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டாராக வெற்றி பெற அவருக்கு உதவியது. எமோசனல் இன்டலிஜன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை அவரிடம் காண முடிந்தது. எது எப்படியோ, நம்மைக் கவர்ந்த ஒரு பங்கேற்பாளர் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டிச் சென்றது நமக்கு உண்மையில் சந்தோஷத்தை தந்தது. ஒருவேளை யார் வெற்றி பெறுவார்கள் என்று முன் கூட்டியே கணிக்கும் திறமை நம்மிடம் இருக்கிறதோ என்னவோ! (சரி, சரி! புரிகிறது! இது கொஞ்சம் ஓவர்தான்!)

இது போன்ற ஒரு தரமான நிகழ்ச்சியைக் கொடுத்த விஜய் டிவிக்கு நமது பாராட்டுக்கள்.

பின்னூட்டமொன்றை இடுக